BJP Election Commission Pondicherry

வாக்காளர்கள் செல்போன் எண்ணை ஆதார் மூலம் எடுத்து பாஜக வாட்ஸாப் பிரச்சாரம் – நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் !

புதுச்சேரியில் ‘வாட்ஸ் ஆப் குழுமம்’ துவங்கி பா.ஜ.க. செய்து வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, ‘வாட்ஸ்அப் குழுமங்களை’ தொடங்கி பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘வாட்ஸ்அப் குரூப்கள் உருவாக்கி செய்யப்படும் பிரசாரம் குறித்து மனுதாரர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

‘அரசியல் கட்சிக்கு எப்படி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கிடைத்தன? அந்த செல்போன் எண்களை அரசியல் கட்சி எப்படி பயன்படுத்தலாம்?’

என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

‘இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதோடு, இந்த வழக்குக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் விரிவான பதிலை தெரிவிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இது குறித்து நேற்று தினத்தந்தியில் செய்தி வெளியானது.