International News Israel Palestine Terrorism

சோதனைச்சாவடியில் பாலஸ்தீனிய பெண்மணியை சுட்டு கொன்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை!

செப் 18, 2019: ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள கலந்த்யா (Qalandya) இராணுவ சோதனைச் சாவடியில் இன்று காலை ஃபலஸ்தீனிய பெண் ஒருவரை இஸ்ரேலிய இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை மற்றும் பாலஸ்தீனிய சாட்சிகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ -‘தி மிடில் ஈஸ்ட் ஐ ‘ ஊடகத்தால் உண்மையானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு சீருடையில் துப்பாக்கிகளுடன் இருக்கும் இஸ்ரேலி படையினர் பல மீட்டர் தொலைவில் நிற்கும் ஒரு பெண்ணை சுட்டு வீழ்த்துகின்றனர்.

கிழக்கு ஜெருசலேமை மத்திய மேற்குக் கரையில் இருந்து பிரிக்கும் மிக முக்கியமான இஸ்ரேலிய சோதனைச் சாவடியான கலந்தியாவில் பாதசாரி செல்லும் பாதையை அடையாளம் காண முடியாமல் போனதால் அந்தப் பெண் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் தட்டு தடுமாறி உள்ளார். அப்போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர்அந்த பெண்ணை நோக்கி ஒரு முறையில்லை, 4 முறை சுட்டுள்ளனர் என்று நேரடி சாட்சிகள் தெரிவிக்கின்றன.

“வழிதெரியாமல் அந்தப் பெண் சோதனைச் சாவடியின் தவறான பகுதியை நோக்கி சென்று விட்டார். அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி செல்ல முயற்சித்ததாக தெரிகிறது. உடனே ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய பாதுகாப்பு(!) படையினர் அந்த பெண்ணை நோக்கி திட்டவும், துரத்தவும் தொடங்கினர். அந்த சமயத்தில், அவர் ஒரு சிறிய கத்தியை தனது பாதுகாப்பிற்கு அஞ்சி வெளியே எடுத்துள்ளார்” என்று சம்பவத்தை நேரில் கண்ட ஜெருசலேமைச் சேர்ந்த ஜரதத் கூறினார். இது தான் சாக்கு என்று கழுகு இரைக்கு காத்திருப்பதை போன்று அந்த அப்பாவி பெண்மணியை சுட்டு வீழ்த்தியுள்ளது இஸ்ரேலிய படை.

“அவர்கள் அந்த பெண்ணை கட்டுப்படுத்தியிருக்க முடியும்,5 இஸ்ரேலியபடையினர் அங்கு இருந்தனர்.அந்த பெண்ணோ ஏழு மீட்டர் தொலைவில் இருந்தார். அவர்கள் வேண்டுமென்றே அந்த பெண்ணை கொன்றார்கள். ரமல்லாவிற்கும் ஜெருசலேதிற்கும் மத்தியில் பயணிக்க ஒவ்வொரு நாளும் அங்குள்ள சோதனைச் சாவடியைக் கடக்கும் கட்டாயத்தில் பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.பாலஸ்தீனர்கள் இவ்வாறு அனுதினமும் செல்வதை தடுக்கும் விதமாக, பயமுறுத்துவதற்காக இவ்வாறு கொலை செய்துள்ளார்கள் ” என்று ஜரதத் மேலும் கூறினார்.

ஈவு இரக்கமில்லா படையினர் !

அந்த பெண்மணி சுடப்பட்டு கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் நிலையிலும் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி மருத்துவ சிகிச்சை பெற விடாமல் தடுத்து இஸ்ரேலிய படையினர் (அராஜகத்தில்) ஈடுபட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய காவல்துறை செய்தித் தொடர்பாளர், கலந்தியா சோதனைச் சாவடியில் ” தாக்குதலை நடத்த முயன்ற பெண் பயங்கரவாதி(!) கொல்லப்பட்ட்டார்” என்று குறிப்பிட்டு நிலத்தில் கீழே கிடந்த கத்தியின் படத்தை வெளியிட்டார்.

2015 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் ஜெருசலேமிலும் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் 56 சதவீதம் பேர் சோதனைச் சாவடிகளில் கொல்லப்பட்டதாக ஜெருசலேம் ஆய்வு மையத்தின் இயக்குனர் ஆலா ரிமாவி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, இஸ்ரேலிய படைகள் அப்பகுதியில் இருந்த பாலஸ்தீனிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது, கண்ணீர்ப்புகை மூலம் தொழிலாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்தது, பின்னர் இரு திசைகளிலும் சோதனைச் சாவடியை மூடியது.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் – போதிய எச்சரிக்கைகள், வானில் சுடுவது , மற்றும் உயிர் இழப்பைத் தவிர்ப்பதற்காக தாக்குபவர்களை கீழ் மூட்டுகளில் சுட வேண்டும் என்று உள்ள இராணுவ விதிமுறைகளை புறக்கணித்தமைக்கு ரிமாவி கண்டனம் தெரிவித்தார்.

2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடையில் இதுவரை 236 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் கொன்று குவித்துள்ளனர். இவை பெரும்பாலும் கிழக்கு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடைபெற்றதாகும்.