Islamophobia Karnataka Muslims

காட்டுப்பகுதியில் சாலையோரமாக தொழுது கொண்டிருந்த ஊமை மனிதரை கற்களாலும், கோடாரியாலும் தாக்கிய பாசிஸ்டுகள்!

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம், சக்ரேபைலு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வாய் பேச முடியாத முஸ்லிம் வயோதிகர் ஒருவர், தொழுகை நேரம் வந்ததும், ரோட்டோரமாக ஒதுங்கி எவருக்கும் இடையூறின்றி தொழுகையில் ஈடுபட்டுள்ளார், அப்போது அப்பக்கமாக வந்த 5 பாசிச பயங்கரவாதிகள் அந்த வயோதிகர் தொழுது கொண்டிருக்கையில் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கற்களாலும் தாக்கியுள்ளனர். அவரது தொப்பியை கழற்றி எரிந்து அவரது மேலாடையையும் கிழித்து எறிந்துள்ளனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த மரம் வெட்டும் கோடாரியை கொண்டு அவரது நெஞ்சு பகுதியில் கிழித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.

பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட நிலையில் நின்று கொண்டிருந்தவரை கண்ட, அவ்வழியே சென்ற ஒரு வாகனஓட்டி என்ன நடந்தது என்று கேட்க மேலே நாம் குறிப்பிட்டுள்ள விவரத்தை செய்கையால் கூறுகிறார்.

அதை கேட்ட அந்த வாகனஓட்டி

“நம் நாட்டின் தலைவிதியைப் பாருங்கள். அவர் செய்ததெல்லாம் சாலையோரத்தில் தனது நமாஸை நிறைவேற்றியது தான். இது போன்ற ஒரு ஊமை நபரைத் துன்புறுத்துவதும் விலங்குகளை காயப்படுத்துவதும் ஒன்றே. அவர் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? சங்கிகள் மனித தன்மையற்றவர்கள்” என்கிறார்.

மேலும் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் ? நான் உங்களை அழைத்து செல்கிறேன் என்று அந்த ஏழை மனிதரை நோக்கி அவர் கேட்க.. மேலே வானத்தை காட்டி, இறைவன் இருக்கிறான், அவன் எனக்கு போதுமானவன் என கூறிவிட்டு நடந்தே செல்கிறார் வாய் பேச முடியாத அந்த முஸ்லீம் நபர்.

இதற்கு காரணம் பாஜக எம்.எல்.ஏ ஷோபாவின், முஸ்லிம்களுக்கு எதிரான தொடர் வெறுப்பு பிரச்சாரமே என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.