Hindutva Islamophobia Love Jihad Conspiracy Muslims Uttar Pradesh

முஸ்லிம் தொழிலதிபரை லவ் ஜிஹாத் & கற்பழிப்பு வழக்கில் சிக்க வைக்க ‘செட்டப்’ செய்யப்பட்ட பெண் !

உபி: டெல்லியைச் சேர்ந்த 24 வயது இந்துப் பெண், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கஸ்கஞ்சைச் சேர்ந்த 27 வயது முஸ்லீம் தொழிலதிபரை போலி கற்பழிப்பு மற்றும் ‘லவ் ஜிஹாத்’ வழக்கில் சிக்க வைக்க இரண்டு நபர்கள் ‘தன்னை பணியமர்த்தியதை’ ஒப்புக்கொண்டுள்ளார்.

அமன் சவுகான் (34) மற்றும் ஆகாஷ் சோலங்கி (28) என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த இருவரில் ஒருவரான அமன் “பாஜக இளைஞர் பிரிவின் மாவட்ட துணைத் தலைவர்” என்று அவரது முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (TOI) தெரிவித்துள்ளது.

இந்துவாக நடித்து ஏமாற்றியதாக முஸ்லிம் மீது பொய் புகார்:

ராதா என்ற அந்த பெண், தொழிலதிபரை குரேஷி தன்னை ‘மோனு குப்தா’ என்று காட்டிக் கொண்டதாகவும், “தன்னை திருமணம் செய்து கொள்வதாக” உறுதியளித்ததாகவும், பின்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அவரது புகாரைத் தொடர்ந்து, குரேஷி மீது ஐபிசி பிரிவுகள் 376 (கற்பழிப்பு), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), மற்றும் 506 (குற்றம் கருதி மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் ஜூலை 16 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பெண் ஏன் உண்மையை போட்டு உடைத்தார்?:

ராதா CrPC பிரிவு 164 இன் கீழ் ஒரு மாஜிஸ்திரேட் முன் இந்த வழக்கில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அப்போது மருத்துவ பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ராதா தனது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளார். மேலும், தன் புகார் பொய்யானது என நிரூபிக்கப்பட்டால், சிறைக்கு செல்ல நேரிடும் என்ற அச்சத்தில், அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இதனனால் அமன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் தான் இவ்வாறெல்லாம் செய்திட “தன்னை பணியமர்த்தினர்” என்று அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இந்து முஸ்லிம் கலவரம் மூட்டும் வேலை:

முன்னதாக, சவுகான் மற்றும் சோலங்கி, வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இந்துத்துவாவினருடன், “கற்பழிப்பு மற்றும் (இல்லாத) லவ் ஜிஹாத்” விவகாரம் தொடர்பாக கஞ்சதுந்த்வாரா காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதி மிகவும் கொந்தளிப்புடன் இருந்து வந்தது, கலவரம் மூண்டு விடுமோ என்ற நிலை உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது உண்மை வெளியாகி உள்ளதால் சௌஹான், சோலங்கி மற்றும் ராதா ஆகியோர் மீது குற்றவியல் சதி குற்றத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில் அம்பலம் :

காஸ்கஞ்ச் காவல்துறையின் எஸ்பி பிபிஜிடிஎஸ் மூர்த்தி கூறுகையில், “எங்கள் விசாரணையில் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அந்த பெண் அளித்த அனைத்து விவரங்களும் தவறானவை என்று கண்டறியப்பட்டது. அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள விரும்பவில்லை. பின்னர் அவர் வாக்குமூலம் அளித்தார். உள்ளூர்வாசிகள் இருவர் தன்னிடம் இதைச் செய்யச் சொன்னதாக அவள் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் பொருளாதார ரீதியாக இரண்டு தரப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது” என தெரிவித்தார்.

SHO அனூப் குமார் பார்தி கூறுகையில், “இருவரும் கைது செய்யப்பட்டனர் எனினும் நீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம்” என்றார்.

வழக்கமான மறுப்பு:

குற்றச்செயல்களில் சிக்கி கொண்டால் அவர்கள் தங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை என சொல்வது எழுதப்படாத மரபு ஆகிவிட்டது அதற்கேற்ப , பாஜக மாவட்டத் தலைவர் கே.பி.சிங் கூறுகையில், “அமன் சவுகான் பாஜக தொண்டர் அல்ல. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆகாஷ் சோலங்கியை எனக்குத் தெரியாது. இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்றார்.