National Security NIA Uttar Pradesh

உபி: வெடிகுண்டுகளுடன் சிக்கிய 6 பேர்; தீவிரவாத பட்டம் சுமத்தப்படாத வினோதம்!

உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (STF) சனிக்கிழமையன்று காஜிபூரில் இரண்டு கையெறி குண்டுகளுடன் ஆறு பேரை கைது செய்தது. குற்றவாளிகள் கையெறி குண்டுகளை பூர்வாஞ்சலின் தன்ஜி கும்பலுக்கு விற்க முயன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர.

கைது செய்யப்பட்ட 6 பேரும் மகேஷ் ரஜ்பர், நவீன் பஸ்வான், அபிஷேக் சிங், ரோகன் ராஜ்பர் மற்றும் ராகேஷ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் காஜிபூரில் வசிப்பவர்கள். சென்னையில் பணிபுரியும் காஜிபூரைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கையெறி குண்டுகளை தன்னிடம் கொடுத்ததாகவும், அவை அதிக விலைக்கு விற்கப்பட உள்ளதாகவும் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மூவர் அரவிந்த், ரோஹித் மற்றும் பிரிஜ்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்னையில் இந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவர்கள் பல இடங்களில் வெடிகுண்டுகளை விற்க முயன்றுள்ளதாகவும், அப்போது வினய் என்பவரோடு தொடர்பு ஏற்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. வினய் என்பவர் கொலை உட்பட பல கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்.

மொத்தத்தில் இது ஏதோ ரவுடி கும்பல் விவகாரம் என்ற அளவிற்கு விவகாரம் சுருக்கி விடப்பட்டு விட்டது. நாம் செய்தி வெளியிடும் இந்த நிமிடம் வரை இந்தியா டுடே தவிர வேறு எந்த ஒரு தேசிய அளவிலான ஊடகமும் இது குறித்து செய்தி கூட வெளியிடவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்திருந்தால் இந்நேரம் அனைத்து ஊடகங்களிலும் செய்தியாகி, தீவிரவாத பட்டமும் வழங்கப்பட்டு இந்நேரம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு என்ஐஏ விடம் வழக்கின் விசாரணை ஒப்படைக்கப்பட்டு இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உண்மையில் இதன் பின்னால் உள்ளவர்கள் யார், அவர்களின் திட்டம் என்ன? என்பன போன்ற விஷயம் வெளிவர வேண்டும் என நெடிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.