Article 370 Kashmir

காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுத்த விஜய் சேதுபதி !

இந்திய திரைப்படவிழா ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில்மக்கள் செல்வன் விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரிலேயேவிற்கு சென்றார் விஜய்.

அப்போது ஆஸ்திரேலியாவின் தமிழ் வானொலி ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகர் விஜய்சேதுபதி, காஷ்மீர் விஷயம் குறித்து கேள்விக்கு பதிலளித்தார். அப்போது “ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. பெரியார் அன்றைக்கே சொல்லிவிட்டார். காஷ்மீரின் பிரச்னைகளுக்கு அந்த மக்கள்தான் முடிவெடுக்க முடியும். உங்கள் வீட்டு விவகாரத்தில் நான் தலையிட முடியாது. ஏனெனில் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கே அதன் சூழ்நிலை தெரியும். ஆகையால் நான் அவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஆளுமை செலுத்தமுடியாது”. என்று தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் பொதுவாகவே மக்கள் விவகாரங்களில் அரிதே குரல் கொடுப்பார்கள், அதிலும் அரசு கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றால் சொல்லவே வேண்டாம். இதற்கு மாற்றமாக விஜய் சேதுபதி மக்கள் உரிமைகள் பறிக்கப்படும் சமயங்களில் எல்லாம் தன் கருத்தை தைரியமாக தெரிவித்து வருபவர் . முன்னதாக ”பிற்போக்குத்தன்மை கொண்ட செயலை செய்யும் மத்திய அரசு” என்று நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை ஒரு பெரும் சாதனையாக குறிப்பிட்டும் இதனால் மோடி அமித் ஷா கிருஷ்ணர், கர்ணனை போன்றவர்கள் என்று குறிப்பிடும் ரஜினி போன்றவர்கள் இருக்கும் அதே திரையுலகில் பகுத்தறிவும் , வரலாற்று அறிவும் மிக்க விஜய் சேதுபதி போன்ற நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும்.