Crimes against Children Uttar Pradesh

உபி : 16 வயது சிறுவனுக்கு ஆசன வாயில் வழியாக காற்று செலுத்தப்பட்டதில் கொடூர மரணம் !

பிலிபிட்: உபி யில் 16 வயது சிறுவனைப் பிடித்து, ஆசனவாயில் வழியாக உயர் சக்தி கொண்ட காற்று அமுக்கி மூலம் காற்றை உந்தி, அவரது உள் உறுப்புகளை சேதப்படுத்தி உள்ளனர் மூன்று கயவர்கள். பரேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிர் இழந்துள்ளார்.

சிறுவன் ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்ததையடுத்து, 22 முதல் 26 வயது இடையிலான மூன்று நபர்கள் மீது பிலிபிட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏதேனும் கோபத்தின் காரணத்தால் இவ்வாறு செய்தார்களா, அல்லது விளையாட்டுக்காக இப்படி செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிலிபிட்டின் புரன்பூர் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுவனின் தந்தை அளித்த எழுத்துப்பூர்வ புகாரின்படி, அவரது மகன் ஒரு அரிசி ஆலையில் வேலை செய்து வந்தார்.

“மார்ச் 4 ஆம் தேதி, அவர் மதிய உணவை சாப்பிடவிருந்தபோது, ​​அமித், சூரஜ் மற்றும் கமலேஷ் என அடையாளம் காணப்பட்ட மூன்று நபர்கள் எனது மகனைப் பிடித்து கொண்டனர். அமித் மற்றும் சூரஜ் என் மகனின் கைகளைப் பிடிக்க, அரிசி ஆலையின் காற்று அமுக்கியை கொண்டு ஆசன வாயில் வழியாக காற்றை செலுத்தி உள்ளார் கமலேஷ் ” என புகாரில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் மருத்துவர்கள் திகைத்து சிகிச்சை அளிக்க முடியாததால், சிறுவன் பிலிபிட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து, மருத்துவர்கள் அவரை பரேலியில் உள்ள உயர் மருத்துவ வசதிக்கு அனுப்பினர். அங்கு அவர் சனிக்கிழமை மரணித்தார்.