இன்று ஞாயிறன்று காலை 11 மணியளவில் திரு ரஜினிகாந்த் அவர்களை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் உடைய மாநில நிர்வாகிகள் சந்தித்தனர். பிப்ரவரி 5ஆம் தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசியல் கட்சிகள், முஸ்லிம் மத குருமார்களை தூண்டிவிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியிருந்தார்.
அவருக்கு ஜமாத்துல் உலமாவின் சார்பில் அன்றே பதில் தரப்பட்டது. இந்த போராட்டத்தில் எதார்த்த நிலவரம் குறித்து அவரை சந்தித்து விளக்க விரும்புவதாக அதில் தெரிவித்திருந்தோம் . அந்தக் கடிதத்தைப் படித்த திரு ரஜினிகாந்த் கடிதம் மிகவும் நாகரீகமாக எழுதப்பட்டிருக்கிறது என்று கூறி சபை நிர்வாகிகளை அவசியம் சந்திக்கிறேன் என்று கூறினார்.
அதனடிப்படையில் இன்று ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள் அவரை சந்தித்தனர். மிகுந்த மரியாதையோடு அனைவரையும் வரவேற்ற அவர் ஜமாத்துல் உலமாவின் கருத்துக்களை கவனமாக கேட்டிருந்தார். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் இந்தியா முழுக்க சிஐஏ, என்ஆர்சி என்பிஆர் சம்பந்தமாக முஸ்லீம்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் எழுந்துள்ள அச்சத்தின் நியாயங்களை அவருக்கு விளக்கிச் சொன்னபோது அது சரிதான் : அதில் நியாயம் இருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டார்.
அதோடு இந்த அச்சத்தை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என தங்களைப் போன்ற மத குருமார்கள் தீர்மானித்து சொன்னால் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் அகன்று அமைதி ஏற்பட தன்னால் இயன்ற அனைத்தையும் உங்களோடு சேர்ந்து செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என உறுதியளித்தார்.
ஜமாத்துல் உலமா நிர்வாகிகளை சந்திக்க நேரம் ஒதுக்கி அனைத்து கருத்துக்களையும் கவனமாக கேட்டறிந்த திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் நன்றி கூறி விடை பெற்றனர்.
என ஜமாஅத்துல் உலமா அறிக்கை வெளியிட்டுள்ளது.