Article 370 DMK Kashmir

காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனே விடுவிக்ககோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 கடந்த ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த அவர்களின் உரிமையான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் காஷ்மீரில் கடும் ஊரடங்கு உத்தரவு,  தொலைபேசி , இன்டர்நெட் முடக்கம் என எந்த கட்டுப்பாடுகளும்  நீக்கப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் மட்டுமே தொலைபேசி வேலை செய்கிறது.

பல்வேறு ஜனநாயக படுகொலைகள் நடந்து வரும் காலத்தில் காங்கிரஸ்,  போன்ற மூத்த கட்சிகளே உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திமுக என்கின்ற மாநில கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் அதை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வந்துள்ளது. அந்த வகையில் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் படுகொலையை கண்டித்து ஒரு மாபெரும் போராட்டத்தை டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் வைத்து வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடத்த இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. 

அதில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மக்களிடம் கலந்து ஆலோசிக்காமலும், ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அனுமதி பெறாமலும் ஒரு தலைபட்சமாக நீக்கப்பட்டதை எதிர்த்தும், ஒரு வழக்கும் பதியாமல் 14 நாட்களுக்கும் மேலாக போலீசாரால் கடுங்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா இன்னும் கைது செய்யப்பட்டுள்ள பல்வேறு ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்க கோரியும் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் திமுகவை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கம்யூனிஸ்ட்,  திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற எதிர் கட்சியினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என செய்தி வெளியாகி உள்ளது.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அமைதி திரும்புகிறது” என்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5-8-2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து தொலை தொடர்புகளை துண்டித்து காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை செயல்படுத்திக் கொண்டிருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

காஷ்மீரத்து சிங்கம் என்று அனைவராலும் அழைக்கப்படும் சேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா தனது 83-வது வயதிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர். அதேபோல் அவரது மகன் உமர் அப்துல்லா, இன்னொரு முன்னாள் முதல்வர் மெகபூபா மப்டி ஆகியோர் ஜனநாயகத்தின் குரலாக நின்று காஷ்மீர் மக்களுக்கு அரும்பணியாற்றியவர்கள். இவர்கள் அனைவரையும் இன்றோடு 14 நாட்களுக்கும் மேலாக கைது செய்து வீட்டுக் காவலில் வைத்து அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் பறித்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமலேயே காஷ்மீர் கவர்னரின் பரிந்துரையை ஏற்று, காஷ்மீர் மாநில சட்டமன்றம் இல்லாமலேயே நாடாளுமன்றத்தில் மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றி காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து வைத்திருக்கிறது. 1947-ல் இருந்து இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த காஷ்மீரை இன்றைக்கு அடக்குமுறைகள், ஊரடங்கு உத்தரவுகள் மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

காஷ்மீரில் என்ன நடக்கிறது?. அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களின் கதி என்ன ஆனது?. சகஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இன்னும் ஏன் காஷ்மீர் மாநிலம் ஸ்தம்பித்து நிற்பது ஏன் என்பது பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை மந்திரி அமித்ஷாவோ கவலைப்படு வதாக தெரியவில்லை. காஷ்மீரில் இருட்டடிப்புச் செய்துவிட்டு அங்கே ஜனநாயக படுகொலையை செய்துவிட்டு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை அமல்படுத்திவிட்டு நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி “காஷ்மீரில் சாதித்து விட்டோம்” என்று கூறிவருவது ஒரு வகை அரசியலே தவிர நாட்டின் மீதுள்ள பற்றாகவோ, பாசமாகவோ தெரியவில்லை.

பொருளாதாரத்தில் திணறி தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்ற அவல நிலைமை பற்றி கவலைப்படாமல் அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கண்டுகொள்ளாமல் ஒரு மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவரை கைது செய்வது, அங்கு மக்களைச் சந்திக்க விரும்பும் அகில இந்திய கட்சிகளின் அரசியல் தலைவர்களை தடுத்து நிறுத்துவது என்று அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.

ஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றத் துடித்து இப்போது காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது பா.ஜ.க. அரசு என்பதைப் பார்க்கும் போது இவர்களுக்கு ஜனநாயகத்திலும் நம்பிக்கையில்லை. இந்தியாவை கட்டிக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திலும் நம்பிக்கையில்லை என்பதையே எடுத்துரைக்கிறது.
தேச தந்தை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்ற அரும்பெரும் தலைவர்கள் ஆங்கிலேயரிடம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகளை மூலம் பிடுங்கிக்கொள்ள மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முயற்சி செய்வதை தடுத்தே தீர வேண்டியது ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்து தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகின்ற 22-8-2019 அன்று காலை 11 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின்  தலைமையில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட 5 நாட்களுக்கு பிறகு இது குறித்து ஆலோசிக்க கட்சி உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திடீரென நீக்கப்பட்டதை எதிர்த்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.