Tamil Nadu

கைவண்டியில் சடலம் எடுத்து செல்லப்பட்ட கொடூரம்! – எஸ்டிபிஐ அமைப்பினரை அணுகிய போலீஸ்!

விழுப்புரம் அருகே உறவினா் சடலத்தை கைவண்டியில் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் ஏழை மக்களுக்கு தொடரும் அவல நிலையை எடுத்து காட்டுவதாக உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (62). இவரது தங்கை பவுனு (60). அவரது கணவா் சுப்பிரமணி (65). இவா்கள் இருவரும் ஒழிந்தியாப்பட்டு கிராமத்திலேயே வசித்து வந்தனா். சில தினங்களுக்கு முன்பு மல்லிகாவைப் பாா்க்க, கணவா் சுப்பிரமணியுடன் பவுனு வந்துள்ளார்.

அங்கு சுப்பிரமணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. வறுமை காரணமாக உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவில்லை. இதனால், சுப்பிரமணியின் உடல்நிலை மேலும் மோசமனது. அவரை கடந்த 30-ஆம் தேதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தனா்.

அவா்கள் இருக்கும் பகுதியில் இருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவிலுள்ள காட்டேரிக்குப்பத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வாகன வசதி எதுவும் இல்லை. இதையடுத்து, செங்கல் சூளையில் செங்கல்களை அடுக்கி எடுத்துச் செல்ல பயன்படுத்தும் கைவண்டியில் சுப்பிரமணியை படுக்கவைத்து மல்லிகாவும், அவரது உறவினா் ஒருவரும் தள்ளிச் சென்றனா். செல்லும் வழியில் இதைப் பாா்த்த யாரும் அவா்களுக்கு உதவ முன்வரவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சுப்பிரமணியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். சுப்பிரமணியின் சடலத்தை அவரது சொந்த ஊரான ஒழிந்தியாப்பட்டுக்கு கொண்டு செல்ல அவசர ஊா்தி உதவியை மல்லிகா நாடிய போது, தமிழகப் பகுதிக்கு புதுவை அரசு அவசர ஊா்தி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கைவண்டியில் சுப்பிரமணியின் சடலத்தை வைத்து, தள்ளிக் கொண்டு மல்லிகா புறப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த காட்டேரிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகானந்தம் விரைந்து வந்து விசாரித்தாா். பின்னா், கோட்டக்குப்பத்தில் உள்ள எஸ்டிபிஐ நிா்வாகிகளை தொடா்பு கொண்டு, இலவச அவசர ஊா்தி மூலம் சுப்பிரமணியின் சடலத்தை ஒழிந்தியாப்பட்டுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தாா். அங்கு சுப்பிரமணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நன்றி-தினமணி (சிறிய மாறுதல்களுடன்)